இன்றைய உலகம் சுரண்டலால் இயங்கக்கூடியதாக மாறியிருக்கிறது. எங்கும் எதிலும் சுரண்டல். இதில் பலரால் பெரிதாக கண்டுகொள்ளப்படாத அல்லது சுரண்டல் என்றே தெரியாத அளவு normalise ஆகா இருக்கும் ஒரு சுரண்டல் உள்ளது. தன் தேவைக்கு - கெடச்சாண்டா இளிச்சவாயன் என்று - மற்றவரை பயன்படுத்திக்கொள்வது.
ஊரிலோ, வீட்டிலோ, அலுவலகத்திலோ, பள்ளியிலோ, கல்லூரியிலோ அப்படிப்பட்ட சுரண்டலை காணலாம்; ஒவ்வொரு குழுவிலும் அப்படிப்பட்ட ஒருவன் கிடைத்துவிட்டால் அவனை/அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிழிந்து எடுப்பார்கள். யார் உதவியும் இன்றி தன்னாலேயே அந்த வேலையை செய்யமுடியம் என்றாலும் மற்றவரை அதை செய்யச்சொல்லுவார்கள். ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை. தப்பித்தவறி வாயை திறந்து என்னால் முடியாது வேறு வேலை இருக்கிறது என்று சொன்னாலும் விடுவதில்லை. எப்படியாவது ஒத்துக்கொள்ளச் செய்துவிடும்படி வாயால் வடை சுடுவார்கள் (Manipulate). உதவிகேட்டு வந்தவரிடம் நீ அப்படி சொல்லலாமா என்று நம்மை நாமே குற்றவுணர்வு கொள்ளும்படி Guilt Trip செய்வார்கள்.
உதவி என்பது வேறு உதவி என்ற பெயரில் கைமாறின்றி மற்றவரை பயன்படுத்திக் கொள்வதென்பது வேறு
பல உறவுமுறைகளின் பெயரால் ஒருவரை மற்றொருவர் தன் தேவைக்கு பயன்படுத்திக்கொள்வது சாதாரண நடைமுறையாக பரவிக்கிடக்கிறது. இப்படி மற்றவரை பயன்படுத்திக்கொள்பவர்கள் மற்றவர்களைப்பற்றி சிந்திப்பார்களா என்றே தெரியவில்லை.
நாம் பிறந்தவுடனே நம்முடைய நேரம் குறைய தொடங்கிவிடுகிறது. ஆமாம், நாம் பிறந்ததும் மரணத்தை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம். நாம் செலவிடும் ஒவ்வொரு நொடியும் வெறும் நொடியல்ல அதனூடே நம் வாழ்க்கையையும் செலவழிக்கிறோம்/இழக்கிறோம். வாழ்க்கையும் நேரமும் பின்னி பிணைந்திருக்கிறது. நாம் நம்முடைய நேரத்தை எப்படிவேண்டுமானாலும் செலவழித்துக்கொள்ளலாம் இயற்கையில் அதற்கு எந்தவித விதிமுறையும் இல்லை. அதேபோல் மற்றவரும் அவருடைய நேரத்தை எப்படிவேண்டுமானாலும் செலவழிக்கலாம் அது அவருடைய விருப்பம்.
உனக்கு எந்த வேலையும் இல்லை வெட்டியா தானே இருக்கிறாய் அதனால் எனக்காக இதை செய், அதை செய் என்று சொல்வதே வன்முறை. மற்றவருக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ அவரை பயன்படுத்திக்கொள்வதற்கு முதலில் அவருக்கு விருப்பம் இருக்கிறதா என்று பணிவோடு கேட்கவேண்டும். விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாள் எந்த வெறுப்பும் இல்லாமல் மனதார அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்கவேண்டும். ஏனென்றால் நமக்காக மற்றவர் செய்யும் வேளையில் அவரது உழைப்பும், நேரமும் அதனூடே அவருடைய வாழ்வும் மரித்துக்கொண்டிருக்கிறது. சுருங்க சொன்னால் அவருடைய வாழ்வை நாம் எடுத்துக்கொள்கிறோம். இதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
ஒருவருடைய வாழ்வை எடுத்துக்கொள்ளும் அளவு அந்த வேலை அவ்வளவு முக்கியமானதா, நம்மால் அதை தனியாகவே முடியாதா என்று யோசித்துவிட்டு மற்றவரை அணுகவும். அது சில நிமிட வேலையானாலும் சரி.
மீண்டும் சொல்கிறேன் உதவி என்பது வேறு. மற்றவர் நம்மை கேட்கவில்லையென்றாலும் நாமே முன்சென்று உதவிபுரியலாம். ஆனால் எதற்கெடுத்தாலும் மற்றவரை வேலைவாங்குவது, பயன்படுத்திக்கொள்வது என்பது வேறு. அதேபோல் கூலிக்கு வேலைவாங்குவது என்பது வேறு அதைப்பற்றி நாம் இங்கு விவாதிக்கவில்லை.
எனவே, மற்றவர் வேலைவெட்டியே இல்லாமல் இருந்தாலும், ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டிருந்தாலும், நாள்முழுக்க சும்மாவே இருந்தாலும். அவரை தன் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் உரிமை இங்கு எவருக்கும் இல்லை. அவரும் மற்றவரை பயன்படுத்திக்கொள்ள உரிமை அவருக்கு இல்லை.
சும்மா தானே இருக்க என்று சொல்லி சொல்லியே இந்த சமுதாயம் மற்றவரை பயன்படுத்திக்கொள்கிறது. சும்மா இருப்பவரை நம் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சட்டம் உள்ளதா என்ன! சும்மா இருப்பவர் உங்கள் தேவைகளுக்கு வளைந்து கொடுக்கவில்லையென்றால் எதற்கும் உதவாதவன்/உதவாதவள் என்று தூற்றுவது, Guilt trip செய்வது இதைத்தவிர நாம் என்ன செய்திருக்கிறோம்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர் வாழ்வை சுரண்டிக் கொண்டிருப்பதைப்பற்றி விழிப்போடிருங்கள். மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்பு கொடுங்கள். மற்றவருக்கு உதவி தேவைப்படும்போது உதவி செய்யுங்கள் ஆனால் யாரையும் எதற்கும் கைமாறின்றி பயன்படுத்திக்கொள்ளாதீர்கள்.
- தீயவன்
No comments:
Post a Comment